குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சடடப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து அங்கு திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில், இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. குஜராத்தைப் பொறுத்தவரையில் 6-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கப்போகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதில், கடந்த 25 வருடங்களுக்குப் பிறகு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த தேர்தலின் போது 20 சதவீதம் மட்டுமே காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இம்முறை அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாட்நகரில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேல் 81,797 வாக்குகளைப் பெற்றார். பாஜக சார்பில் களமிறங்கிய படேல் நாராயண்பாய் லல்லுதாஸ் 62,268 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார்.
இதன்மூலம் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 19,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர் படேல் நாராயண்பாய் லல்லுதாஸ் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.