பீகாரில் ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் அதிகரித்து வருகிறது.
முன்னதாக நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. இதையடுத்து நிதீஷ் குமார் அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இருப்பினும் லாலு மற்றும் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நிதீஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்தார்.
இந்நிலையில், பீகாரில் சமீபகாலமாக குற்றங்கள் அதிகரித்து சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாக, பீகார் முன்னாள் துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் கூறினார்.
அதுபோல, பீகாரில் தினந்தோறும் தொடர்ந்து கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுதொடர்பான செய்திகளை ஊடக நிறுவனங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வர அஞ்சுவதாக லாலு பிரசாத் மகள் மிசா பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், சமீப காலங்களில் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவைகளில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.