மாதந்தோறும் சிலிண்டர் விலையை உயர்த்த அளித்த அனுமதியை வாபஸ் பெற்ற மத்திய அரசு
பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கருதுவதால், மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 அளவுக்கு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
புது தில்லி: பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கருதுவதால், மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 அளவுக்கு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய அரசு அனுமதியுடன் எண்ணெய் நிறுவனங்கள், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் காஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.4 அளவுக்கு உயர்த்தி வருகின்றன. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த முறையை அமல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு மாதந்தோறும் ரூ.2 அளவுக்கு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
ஒரு பக்கம் ஏழை மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகளை வழங்கும் உஜ்வாலா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, மறுபக்கம், சிலிண்டர் விலையை மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்திருப்பது மக்களிடையே எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால், மக்களிடையே எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதால், மாதந்தோறும் சிலிண்டர் விலையை உயர்த்த அனுமதி வழங்கிய மத்திய அரசு அதனை திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இது கடந்த அக்டோபர் மாதமே முடிவு செய்யப்பட்டு, அதன் பிறகு விலை உயர்த்தப்படவில்லை என்றும், வரி உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே விலை உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.