அகிலேஷ், மாயாவதியுடன் மீரா குமார் சந்திப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலின் எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமார், உத்தரப் பிரதேசத்தில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜவாதி கட்சித் தலைவர்
குடியரசுத் தலைவர் தேர்தலின் எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமார், உத்தரப் பிரதேசத்தில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் தனித்தனியாக சந்தித்தார்.
மாயாவதியை அவரது இல்லத்திலும், அகிலேஷை சமாஜவாதி கட்சி தலைமையகத்திலும் மீரா குமார் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர், லக்னௌவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதற்காக நடைபெறும் போராட்டமே குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகும். அனைத்து எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் தங்களது மனசாட்சிப்படியும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
மதச்சார்பின்மை என்ற சித்தாந்தத்தின் மீது கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மதச்சார்பின்மை எனும் சித்தாந்தத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்க்கட்சிகள் கருதியுள்ளன. இதன்மூலம், நாட்டின் மிக முக்கியமான பதவிக்கு ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியோரின் குரல்கள் சென்றடையும். நமது தேசத்தில் 8 முக்கிய மதங்கள் உள்ளன. அனைத்து மதங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். பல்வேறு கலாசாரங்களைக் கொண்டது நமது தேசம். அவற்றை ஒரே சங்கிலியில் பிணைக்க வேண்டும் என்றார் மீரா குமார்.
முன்னதாக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களிடம் அவர் ஆதரவு கோரினார்.