சபரிமலை விமானநிலையத்துக்கு கேரள அரசு இடம் தேர்வு
சபரிமலை விமானநிலையத்துக்கான இடத்தை கேரள அரசு புதன்கிழமை தேர்வு செய்தது.
சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு விமான நிலையம் அமைக்கும் பணியில் கேரள அரசாங்கம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே இறங்கியது.
இதற்காக சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களை தேர்வு செய்து வந்தது. இந்நிலையில், சேருவல்லி ரப்பர் தோட்டத்தில் அதற்கான இடம் இறுதிசெய்யப்பட்டது.
இந்த இடமானது சபரிமலை கோயிலில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 5 மாநில சாலைகள் இணையும் இடமாக இது அமைந்துள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார்.
Advertisement
இதையடுத்து பி.ஹெச். குரியன் தலைமையிலான கூட்டமைப்பின் இந்த பரிசீலனைக்கு கேரள அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், 2,263 ஏக்கர்கள் கொண்ட இந்த இடத்துக்கு சிக்கல் உள்ளது. இந்த இடமானது பிலீவர்ஸ் தேவாலயத்துக்கு சொந்தமானது. எனவே, அந்த இடத்தை உரிமை கோரும் மனு ஒன்றை கோரள உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.