குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக குஜராத்தைச் சேர்ந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தது தெரியவந்துள்ளது.
இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்க இயலாது என்பதால், அவர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா, மாநில வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டார். அப்போது, குஜராத்தில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும், மீரா குமாருக்கு ஆதரவாக 49 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
குஜராத் பேரவையில் பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை ராம்நாத் கோவிந்துக்கு பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக 11 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், மீரா குமாருக்கு 8 வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இது, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.