நிதி நிறுவன மோசடி வழக்கில், சண்டீகரைச் சேர்ந்த நிதி நிறுவனத்தின் முகவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4.18 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுள்ள
தாவது: சண்டீகரைச் சேர்ந்த நிதி நிறுவன மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் முகவர் கமால் கே.பக்ஷி, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சண்டீகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, தில்லி, ஹரியாணா மாநிலத்தின் குர்கான், ஃபரீதாபாத், அம்பாலா ஆகிய இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜிபூரிலும் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, அசையா சொத்துகளுக்கான ஆவணங்கள், நிரந்தர வைப்புத் தொகைக்கான பத்திரங்கள், நகைகள், அதிநவீன கார்கள் என மொத்தம் ரூ.4.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சண்டீகரைச் சேர்ந்த நிதி நிறுவனம், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் ரூ.600 கோடி வரை நிதி திரட்டியுள்ளது.
முதலில், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காக, அவர்களுக்கு அதிக அளவிலான தொகையைத் திருப்பித் தந்த அந்த நிறுவனம், பிறகு அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டது.
இதுதொடர்பாக, பல்வேறு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியதும், நிதி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு மூல காரணமாக இருந்த மலேசியாவைச் சேர்ந்த முகுந்தன் கங்காம், வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டார். அவர், மலேசியாவில் தலைமறைவாக இருக்கலாம் எனத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.