கேரளாவின் திருவனந்தபுரம் அருகே ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர் ராஜேஷ் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து கேரளத்தில் பாஜக சார்பில் முழு அடைப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினரயி விஜயன் மற்றும் காவல்துறை தலைவரை அம்மாநில ஆளுநர் நேரில் அழைத்து தனித்தனியாக விளக்கம் கேட்டார். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 6-ந் தேதி கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 6-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் கண்ணு ஆகிய நகரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுமாதிரியான குற்றச்சம்பவங்களை நான் வன்மையுடன் கண்டிக்கிறேன். இவைகள் நடைபெறாத வகையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தொண்டர்களை பக்குவப்படுத்த வேண்டும். தொண்டர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் இந்த மாதிரியான வன்முறை நடைபெறுவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நமது மாநிலத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது முற்றிலும் துரதிருஷ்டவசமானது. இதன் காரணமாகவே அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து விவாதிக்க உள்ளோம். மாவட்ட ரீதியாகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.