அட்டர்னி ஜெனரல் பதவி நீட்டிப்பு வேண்டாம்: மத்திய அரசுக்கு முகுல் ரோத்தகி கடிதம்
தனக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டாமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதாக அட்டர்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர்) முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
தனக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டாமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதாக அட்டர்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர்) முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
முகுல் ரோத்தகியின் பதவிக்காலம் வரும் 19-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எனக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டாம்; தனியாக எனது வழக்குரைஞர் பணியைத் தொடர விரும்புகிறேன் என்று மத்திய அரசுக்கு கடந்த மாதமே கடிதம் எழுதிவிட்டேன். எனது கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
மத்திய அரசுடன் எனக்கு சிறப்பான உறவு இருந்தது. 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு என்னை அட்டர்னி ஜெனரலாக நியமித்தார். 3 ஆண்டுகாலமாக எனது முழுப் பணிக்காலமும் மிகவும் திருப்தியாக அமைந்தது. இப்போது மீண்டும் எனது பழைய பணிக்குச் செல்ல விரும்புகிறேன். அரசுக்கு என்னால் உதவி எதுவும் தேவைப்பட்டால் அதனை அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
பதவியில் தொடருமாறு பிரதமர் மோடி உங்களைக் கேட்டுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, "அந்த நிலையை நான் எப்போதோ கடந்துவிட்டேன்' என்று ரோத்தகி பதிலளித்தார். நீதிபதிகளை நியமிக்கும் கோலிஜியம் விவகாரம், ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கு, ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம், உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்த விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் முகுல் ரோத்தகி வாதிட்டார். முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விளக்கங்களையும் அளித்தார்.