முதல்வரை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய 11 மாணவர்களுக்கு ஜாமின் மறுப்பு
புதன்கிழமை லக்னோ பல்கலைக்கழக விழாவில் பங்குபெறச் சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய 11 மாணவர்களுக்கு ஜாமின் மறுக்கப் பட்டுள்ளது.
புதன்கிழமை லக்னோ பல்கலைக்கழக விழாவில் பங்குபெறச் சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய 11 மாணவர்களுக்கு ஜாமின் மறுக்கப் பட்டுள்ளது.
உத்திர பிரதேச முதலமைச்சரான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யனாத் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக விழா ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்பொழுது திடீர் என்று சில மாணவர்கள் அவரை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தியபடி “பல்கலைக்கழகத்தை காவிய மயமாக்காதே” என கோஷங்களை எழுப்பினர். மேலும் மாநிலத்தில் ஜாதி மற்றும் மதம் சார்ந்த மோதல்களை முதல்வர் ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அந்த மாணவர்களைக் கைது செய்தனர். 9 மாணவர்களும், 2 மாணவிகளும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் 11 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
Advertisement
லக்னோ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதி சுனில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிமன்றம் அவர்களது ஜாமின் மனுவை நிராகரித்து அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.