தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் என்ற முறையில் மேற்கண்ட இரு தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, அவர்களிடம் ராம் நாத் வாழ்த்து பெற்றார்.
மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை, அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானி, ஜோஷி உள்ளிட்டோரது பெயர்களை, தேசிய ஜனநாயக கூட்டணி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பிகார் ஆளுநராக இருந்த ராம் நாத் கோவிந்தின் பெயரை, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.