தன்னுடைய அமைப்பை தடை செய்த விவகாரம்: சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக்கின் மனு தள்ளுபடி!
இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் தன்னுடைய அரசு சாரா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக் தாக்கல் செய்த மனுவை ..
புதுதில்லி: இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் தன்னுடைய அரசு சாரா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் சாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் பெயரில் ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவி அதன் மூலம் இஸ்லாமிய மதம் தொடர்பான பிரச்சாரங்களை செய்து வருகிறார். நிறைய தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் அவர் இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
சாகிர் நாயக்கின் அமைப்பு மூலம் இளைஞர்கள் மத்தியில் மதம் சார்ந்த அடிப்படைவாத எண்ணங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அவர்கள் ஏதேனும் தீவிரவாத இயக்கங்களில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கருதிய மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அறிவிப்பு மூலம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஐந்து ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டது.
Advertisement
இந்த உத்தரவை எதிர்த்து சாகிர் நாயக் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தடைக்கு தகுந்த காரணங்களோ அல்லது ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை என்றும், முன்னதாக விளக்கம் கோரி நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் சாகிர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது மத்திய உள்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமான ரகசிய ஆவணங்கள் தாக்கல் செய்யயப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி சச்தேவா பிரச்சாரகர் சாகிர் நாயக்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாக தடை செய்யயப்பட்டதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.