ஜிஎஸ்டி முறையில் உரங்களுக்கு அதிக வரி: மக்களவையில் அதிமுக கவலை
மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் விவசாய உரங்கள் மீதான வரி விகிதம் அதிகமாக இருக்கும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை கவலை தெரிவித்தது.
மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் விவசாய உரங்கள் மீதான வரி விகிதம் அதிகமாக இருக்கும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை கவலை தெரிவித்தது.
நாடு முழுதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை நண்பகலில் மத்திய சரக்கு - சேவை வரி மசோதா (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு - சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி) ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய நான்கு துணை மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் வட சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு பங்கேற்றுப் பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய வரிவிதிப்பு முறையில் உள்ள மிகப் பெரிய சீர்திருத்தகமாக ஜிஎஸ்டி முறை இருக்கும். ஆனால், இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களும் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், வர்த்தகர்கள், சிறு தொழில் துறையினர் ஆகியோரை இந்த வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொள்ளச் செய்வதும் இதில் அடங்கும்.
இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுதுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக தமிழகம் முன்வைத்த சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உயர் வருவாய் சமநிலை விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள சிரமம் காரணமாக ஜிஎஸ்டி நடைமுறையில் தமிழகத்திற்கு ரூ.9,270 கோடி வருவாய் இழப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் 100 சதவீதம் இழப்பீடு வழங்கும் சுதந்திரமான இழப்பீட்டு வழிமுறையை சட்டப்பூர்வாக உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. மேலும், ஜிஎஸ்டி முறையில் வேளாண் உரங்களுக்கான வரி விகிதம் 25 சதவீதம் இருக்கும். இது மிகவும் அதிகமாகும் என்றார் வெங்கடேஷ் பாபு.