பிரதமர் நரேந்திர மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், பாலம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குறை கூறுகின்றன. வரலாற்றைப் புரட்டுகையில், மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிக முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பது தெரியவரும்.
பாஜக ஆட்சியின் கீழ் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. பிகாரில் பாஜக ஆட்சி புரிந்தபோது, அந்த மாநிலம் சரிவுப் பாதையிலிருந்து மீண்டது. நாட்டில் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கின்றன.
'பிரதமர் உஜ்வலா திட்டம்' தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், நாட்டில் சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமித் ஷா.