இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: இது எஸ்.பி.ஐயின் கேரளா அட்டாக்!
கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் ...
திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கேரளப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஜுன் மாதம் முதல் எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ.25 கட்டணமாக விதிக்கப்படும். அதே போல ரூ.5000கு மேல் மதிப்பில் கிழிந்த / பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் அதற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், 'இது மிகவும் மூர்க்கத்தனமானது;மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகையில் இருந்தே இந்த அரசு மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்நடவடிக்கை குறித்து திரைபிரபலங்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் சிலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.