ஏடிஎம்-மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணமா? எஸ்பிஐ வங்கி விளக்கம்
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த கட்டண மாற்றம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நேற்று செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என்றும், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான சேவைக் கட்டணம் வழக்கமான நிலையிலேயே தொடரும் என்றும், எஸ்பிஐ வங்கியின் ஸ்டேட் பாங்க் பட்டி (State Bank Buddy))எனப்படும் இ-வாலெட் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கவே ரூ.25 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதாவது, எஸ்பிஐயின் மொபைல் ஆப் ஆன 'எஸ்பிஐ பட்டி'யை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 பணப் பரிமாற்றத்துக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கக் கட்டணம் என்ற தகவல்கள் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
ஏடிஎம்எமில் கட்டணமில்லாமல் பணம் எடுப்பதற்கான எண்ணிக்கை அதே நிலையில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜன் தன் கணக்கு வைத்திருப்போர், ஏடிஎம் கார்ட் மூலமாக மாதத்துக்கு 4 முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.
சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர், ஏடிஎம் கார்டு மூலமாக பெருநகரங்களில் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை இதர ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம். பெரு நகரங்கள் இல்லாத பகுதி என்றால், 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்தும், இதர ஏடிஎம்களில் இருந்து 5 முறையும் பணம் எடுக்கலாம்.