கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள கிருஷ்ணர் கோயிலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த மிரட்டலை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளத்திலுள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று குருவாயூர். இங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தக் கோயிலின் அலுவலகத்தை மர்ம நபர் ஒருவர் சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது கோயில் நிர்வாகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், கோயில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாரும், வெடிகுண்டுகளை அகற்றும் நிபுணர்களும் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.