முகப்பு
இந்தியா

மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி 6-ஆம் தேதி காஷ்மீர் பயணம்

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அங்குள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மத்தியய அரசின் சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா, வரும் 6-ஆம் தேதி

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அங்குள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மத்தியய அரசின் சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா, வரும் 6-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குச் செல்கிறார்.
காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, தன்னைச் சந்தித்து பேச விருப்பம் தெரிவிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த பிற அமைப்பினரையும் தினேஷ்வர் சர்மா சந்திப்பார் என்று மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய உளவுத் துறையின் (ஐ.பி.) முன்னாள் தலைவரான தினேஷ்வர் சர்மா (61), கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இப்பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் சட்டபூர்வமான விருப்பங்களை அவர்களுடன் பேசிப் புரிந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்போது உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தினேஷ்வர் சர்மா கூறுகையில், "காஷ்மீரில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் அமைதி நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். காஷ்மீரில் அமைதி ஏற்பட மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த மாநிலத்தில் சமூகவலைதளங்களில் தவறான பிரசாரம் பரப்பப்படுவதை நான் அறிவேன். ஆனால், அவர்களது பிரசாரம் தவறானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் எனது பணி அமையும். காஷ்மீருடன் நான் உணர்வுபூர்வமாக நெருக்கமானவன். 1992-ஆம் ஆண்டில் முதல் முறையாக எனது களப்பணியை காஷ்மீரில்தான் தொடங்கினேன்" என்றார் அவர்.
பிகாரைச் சேந்த தினேஷ்வர் சர்மா, 1979-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவர் ஐ.பி. உளவுத்துறையின் இயக்குநராக கடந்த 2014 முதல் 2016 வரை பதவி வகித்தார்.
மத்திய அரசு கடந்த 2002-இல் இருந்து காஷ்மீர் பேச்சுவார்த்தைக்காக நியமித்துள்ள நான்காவது சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா ஆவார். அவருக்கு அமைச்சரவை செயலர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது, யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை முடிவு செய்வதில் அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
 

முழு கட்டுரையைப் படிக்க →