ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீ. ஓடிய ரயில் என்ஜின்!: பைக்கில் சென்று பிடித்த ரயில்வே ஊழியர்கள்
ஒட்டுநர் இல்லாமல் மின்சார ரயில் என்ஜின் திடீரென ஓடத் தொடங்கியது. 13 கி.மீ. தூரம் வரை சென்ற அந்த ரயிலை ரயில்வே ஊழியர்கள் பைக்கில் துரத்திச் சென்று நிறுத்தினர். திரைப்படக் காட்சிகளை
ஒட்டுநர் இல்லாமல் மின்சார ரயில் என்ஜின் திடீரென ஓடத் தொடங்கியது. 13 கி.மீ. தூரம் வரை சென்ற அந்த ரயிலை ரயில்வே ஊழியர்கள் பைக்கில் துரத்திச் சென்று நிறுத்தினர். திரைப்படக் காட்சிகளை விஞ்சும் இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் வாடி ரயில் நிலையத்தில் புதன்கிழமை அரங்கேறியது.
சென்னை-மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த புதன்கிழமை கர்நாடக மாநிலம் வாடி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் வந்து சேர்ந்தது. வாடியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் வரையிலான ரயில் தடம் மின்மயமாக்கப்படவில்லை.
இதனால், ரயிலில் இருந்து மின்சார என்ஜினை நீக்கிவிட்டு, டீசல் என்ஜினை ரயில்வே பணியாளர்கள் பொருத்தினர். அப்போது 4-ஆவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மின்சார ரயில் என்ஜின், திடீரென மும்பை செல்லும் வழித்தடத்தில் தானாகவே பயணிக்கத் தொடங்கியது. அதில் என்ஜின் டிரைவர் உள்பட யாரும் இல்லை.
இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள்அதிர்ச்சியடைந்தனர்.
எனினும், சுதாரித்துக் கொண்ட அவர்கள் இது தொடர்பாக அடுத்துள்ள சில ரயில் நிலையங்களுக்கு தகவல் அளித்து ரயில் என்ஜின் செல்லும் பாதையில் வேறு ரயில்களை அனுமதிக்க வேண்டாம் என்று தகவல் அளித்தனர். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
வாடி ரயில் நிலையத்தில் இருந்து தன்னிச்சையாகப் புறப்பட்ட அந்த ரயில் என்ஜின் சுமார் 30 கி.மீ வேகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தின்அருகே செல்லும் சாலை வழியாக பைக்கில் அந்த ரயில் என்ஜினைத் துரத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ரயில் என்ஜினின் வேகம் மெதுவாகக் குறைந்தது. இதையடுத்து, பைக்கில் இருந்த என்ஜின் டிரைவர், ஓடிச் சென்று ரயில் என்ஜினில் ஏறி அதனை நிறுத்தினார்.
இத்தனையும் நடைபெறுவதற்குள் அந்த என்ஜின் 13 கி.மீ. தொலைவைக் கடந்துவிட்டது.
மின்சார இணைப்பு இல்லாத நிலையிலும் அந்த ரயில் என்ஜின் எவ்வாறு புறப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரிக்க சிறப்புப் பிரிவை ரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது.