பணவீக்க விகிதம் டிசம்பருக்குள் குறையும்
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பண வீக்க விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பண வீக்க விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.
ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரிப்பது முடிவுக்கு வரும் காலம் இதுவென்று கருதுகிறேன். பருவமழை நன்றாகப் பெய்து, விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த மாதத்தில் இருந்து உணவுப் பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, பணவீக்க விதிகம் 4 சதவீதத்துக்கு கீழ் குறையும் என்றார் அவர்.
ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் மாதம், உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால், பணவீக்க விகிதம் 3.58 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், அது, அடுத்த மாத இறுதியில் 4 சதவீதத்துக்கும் கீழே குறையும் என்று சி.ரங்கராஜன் கணித்துள்ளார்.
முன்னதாக, கருத்தரங்கில் அவர் பேசுகையில், ''உணவுப் பொருள்களின் உற்பத்தியாளர் என்ற முறையில், அரசின் பங்கு அதிகரித்துள்ளது; கல்வி, மருத்துவம் போன்று மக்களுக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு அதிகரித்துள்ளது'' என்றார்.