சசிகலாவுக்கு அடுத்த நெருக்கடி: சிறையில் வசதிகளைப் பெற லஞ்சம்- விசாரிக்க கர்நாடக அரசு முடிவு?
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா சிறையில் வசதிகளைப் பெற உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெலகாவி: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா சிறையில் வசதிகளைப் பெற உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், சசிகலாவுக்கு மற்றுமொரு நெருக்கடி முற்றுகிறது.
சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரினை அடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை கர்நாடக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், சிறைத் துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக லஞ்சம் கொடுத்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கியதற்கு, சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனி சமையலறை, சமையல் செய்ய பெண் கைதிகள், யோகா செய்ய தனி அறை என பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது சசிகலா மற்றும் இளவரசி தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளைச் சீருடைதான் அணிவதாகவும், சிறை உணவையே உண்பதாகவும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி எதிர்காலத்திலும், சசிகலா உட்பட எந்த சிறைக் கைதிக்கும் விவிஐபி மரியாதை வழங்கப்படாது. சசிகலா, தனது தண்டனை முடிந்து சிறையில் இருந்து விடுதலையாகும்வரை இந்த நிலையே நீடிக்கும் என்றும் அவரை சந்திக்கும் பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.