பந்திபுரா தாக்குதல்: 2 விமானப்படை வீரர்கள் பலி, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பந்திபுராவில் நடந்த தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பந்திபுரா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், ஹஜின் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்ததாவது:
இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அலி அலியாஸ் அபு மாஸ், நஸுருல்லா மிர் ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் எல்லையோரம் நடைபெற்ற பல தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. இது பாதுகாப்புப் படையினருக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்றார்.