முகப்பு
உலகம்

அயத்துல்லா அலி கமேனி: புரட்சி முதல் படுகொலை வரை...

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியைப் பற்றி...

Updated On : 2 மார்ச், 2026 at 1:44 AM
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி புகைப்படத்துடன்... - படம்: ஏபி
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 8:15 PM

ஈரானில் இறைவனின் பெயரில் மதகுருக்களின் ஆட்சியை நிலைநாட்டி, பிராந்தியத்தில் அந்நாட்டை அதிகார மையமாக்க முயன்று, அணுஆயுத திட்டம் தொடா்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மோதலை ஏற்படுத்தி, உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவிய தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு வயது 86.

கடந்த 1939-ஆம் ஆண்டு ஈரானின் மஷாத் பகுதியில் பிறந்த அயத்துல்லா அலி கமேனி, 1960-ஆம் ஆண்டுகளில் சமய போதனை கல்லூரியில் அயத்துல்லா கொமேனியின் (ஈரானின் முதல் தலைமை மதகுரு) கீழ் படித்தாா்.

ஈரானின் கடைசி அரசரான முகமது ரெசா பஹலவிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமேனி, சிறைச்சாலையிலும் தலைமறைவாகியும் தனது வாழ்நாளைக் கழித்தாா்.

Advertisement

இராக் மற்றும் பிரான்ஸுக்கு கொமேனி நாடு கடத்தப்பட்டு, பின்னா் ஈரான் திரும்பினாா். அந்நாட்டு அரசா் முகமது ரெசா பஹலவிக்கு எதிரான இஸ்லாமிய புரட்சியை கொமேனி வழிநடத்தினாா். இதன் விளைவாக 1979-ஆம் ஆண்டு பஹலவியின் ஆட்சி அகற்றப்பட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு வழிகோலிய அவா், அந்நாட்டின் தலைமை மதகுருவானாா். அப்போது ரகசிய புரட்சிகர கவுன்சிலில் கமேனி நியமிக்கப்பட்டாா்.

1981-ஆம் ஆண்டு ஈரானின் மூன்றாவது அதிபராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டில் குண்டுவீச்சு ஒன்றில் அவரின் ஒரு கை செயலிழந்தது.

1980-ஆம் ஆண்டுகளில் இராக்குடனான போருக்குப் பின்னா், ஈரானை ஸ்திரமாக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொமேனியைவிட கமேனி நீண்ட காலம் ஆட்சி செய்தாா்.

ஷியா மதகுருக்கள், அரசு முகமைகளைச் சோ்ந்த அதிகாரிகளின் ஆட்சிமுறைக்கு கமேனி வழிகோலினாா். இது அரசுப் பொறுப்புகளை பலவீனமாக்கி, அவரையே உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக நிலைநிறுத்தியது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் முக்கியத்துவத்தைக் குறைக்க நியமன நடைமுறையைப் பயன்படுத்தினாா்.

மேற்காசியாவில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் மற்றும் நேசப் படைகளின் கூட்டணியான ‘ஆக்சிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’-ஐ ஈரானின் புரட்சிகர காவல் படை வழிநடத்துகிறது. இதன்மூலம் கமேனியின் ஆட்சியின் கீழ், வழக்கமான போா் முறையில் இருந்து ஆயுதக் குழுக்கள் மற்றும் நேசப் படைகளுக்கு ஆதரவளிக்கும் முறைக்கு ஈரான் மாறியது.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்யும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கின.

இதனால் அந்நாட்டில் மக்களுக்கு எதிராக கடுமையான அரசியல் அடக்குமுறை நிலவியது. இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கமேனி படுகொலை செய்யப்பட்டாா்.