கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!
கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 29 முதல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களின் மீதான தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனி மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்களுக்கு தெஹ்ரானில் புதன்கிழமை (மார்ச் 4) மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் ஆகியவற்றால் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, நீண்டகாலமாக ஈரானின் தலைமை மதகுருவாகப் பதவி வகித்து வரும் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியானதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.