கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுடன், இந்திய பிரதமர் மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் மத்தியில் அதிக அளவில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் வணிகர்கள் வசம் உள்ள சில்லரை காசுகளை வங்கிகள் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
இதன் காரணமாக வர்த்தகர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சில்லரை காசுகளை சம்பளமாக கொடுக்க வேண்டியது உள்ளது. ஆனால் சில்லரை காசுக்களை வங்கிகள் மற்றும் கடைக்காரர்கள் வாங்க மறுப்பது காரணமாக அவர்களும் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்களுடைய தொழிலை நாங்கள் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று வணிகர்கள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட போஸ்டர்களில் ஒரு புறத்தில் கிம் ஜோங் உன் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இருக்கிறது. அத்துடன் போஸ்டர்களில் உலகத்தை அழிக்காமல் ஓய மாட்டேன் என கிம் சொல்வது போன்றும், வியாபாரத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்வது போல் வாசகங்கள் இடம் பெற்று உள்ளது.
இது தொடர்பாக மாநில போலீசார் 22 வணிகர்களுக்கு எதிராக போலீசார் கிரிமினல் வழக்கை பதிவு செய்து உள்ளனர். அத்துடன் அப்பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக வணிகர்கள் தரப்பில் கைது நடவடிக்கையை அடுத்து இவ்வருடம் தீபாவளியை கொண்டாடப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.