தலைநகர் தில்லியில் ஹூக்கா புகைத்துக் கொண்டே ஹரியாணா மாநில அரசு பேருந்தை அதன் ஓட்டுநர் இயக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தில்லி அரசின் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் எஸ்.கே.அரோரா, தில்லி போக்குவரத்து துறை ஆணையருக்கும், ஹரியாணா மாநில போக்குவரத்து துறை ஆணையருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான ஹெச்ஆர்55டபிள்யு 9038 என்ற எண்ணுடைய பேருந்தின் ஓட்டுநர், ஹூக்கா புகைத்துக் கொண்டே, தில்லியில் அந்த பேருந்தை இயக்கும் காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதனை, உங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தலைநகரில் எவ்வித அச்சமும் இல்லாமல், ஹூக்கா புகைத்துக் கொண்டே பேருந்தை இயக்கிய அந்த ஓட்டுநரின் செயல், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் தடைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானதாகும்.
அரசு வாகனங்களில் புகை பிடிப்பதை, அந்தச் சட்டத்தின் 4-ஆவது பிரிவு தடை செய்கிறது.
பேருந்தை ஓட்டியபோது ஹூக்கா புகைத்ததன் மூலம், பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அந்த ஓட்டுநருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் தடை சட்ட விதிகளுக்கு புறம்பான விளம்பரம், அந்த பேருந்தில் இடம்பெற்றிருப்பது, விடியோ காட்சிகள் மூலம் தெரியவருகிறது. அதுதொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எஸ்.கே.அரோரா வலியுறுத்தியுள்ளார்.