உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
68 வயதாகும் வெங்கைய நாயுடுவுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
பரிசோதனையில், அவருக்கு இதய நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அடைப்பு இருக்கும் இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
இதையடுத்து அவரது உடல்நிலை சீரானதால், இன்று பிற்பகலில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த 3 நாட்களுக்கு பூரண ஓய்வு எடுக்குமாறும், பார்வையாளர்கள் யாரையும் பார்க்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.