லக்னௌ: சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வரும் போதும், போகும் போதும் எழுந்து :நிற்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜிவ்குமார் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க மக்கள் பிரதிநிதிகள் வரும் போதும், போகும்போதும், அரசு ஊழியர்கள் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும். இது மரியாதையை வெளிப்படுத்தும் செயல். இந்த உத்தரவின்படி எழுந்து நிற்காத அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ,க்களின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கடிதங்களுக்கு உடனடியாக பதில் தர வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசு ஊழியர்கள் தங்களை மதிப்பதில்லை என்று பல அமைச்சர்கள், உத்தரப்பிரதேச மாநில முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்தே தலைமைச் செயலாளர் மூலமாக மேற்கண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.