மயங்கி விழுந்த பெண்...
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அங்கு விருந்தினராக வந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் உதவி புரிந்தனர். அதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகை மருத்துவக் குழு வந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது.
பிழையைத் திருத்திய ராம்நாத்...
பெட்ரோலியத் துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் ஹிந்தி மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது, இரண்டு வார்த்தைகளை அவர் தவறாக உச்சரித்தார். இதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதே வார்த்தைகளை, தவறைத் திருத்தி மீண்டும் உச்சரிக்குமாறு பிரதானிடம் தெரிவித்தார். அதை ஏற்று அந்த வார்த்தையை அவர் சரியாக உச்சரித்தார்.
பிகார் ஆளுநராக ராம்நாத் பதவி வகித்தபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் அமைச்சராகப் பதவியேற்றபோது தவறாக உச்சரித்த வார்த்தையை அவர் திருத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியைத் தவிர்த்த அமைச்சர்கள்...
மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், கேரளத்தைச் சேர்ந்த அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர். மற்ற 7 பேரும் ஹிந்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பதவியேற்றனர்.
எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை...
மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்தைத் தவிர வேறு எந்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை.
பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை...
பதவியேற்பு விழாவில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் பாலியான் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.