உத்தரப் பிரதேசத்தில், மறைந்த காங்கிரஸ் பிரமுகரின் மகன் உள்ளிட்ட 4 பேர் மீது அம்மாநில போலீஸார் கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்திர நாத் அவஸ்தியின் மகனான ஆசுதோஷ் தனது 4 நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்டை நாடான நேபாளத்துக்குச் சென்றார்.
அவர்கள் திங்கள்கிழமை தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் குறிப்பிட்ட ஒரு விவகாரம் தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
அதன் விளைவாக, நண்பர் பிரிஜ்நந்தன் திவாரியை ஆசுதோஷ் உள்ளிட்ட மற்ற 4 பேரும் சரமாரியாகத் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த பிரிஜ்நந்தனை பஹ்ராய்ச்-நான்பாரா சாலையில் அப்படியே விட்டு விட்டு, மூன்று நண்பர்கள் தப்பியோடிவிட்டனர்.
ஒருவர் மட்டும் இது தொடர்பாக காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.
எனினும், படுகாயம் அடைந்திருந்த பிரிஜ்நந்தன், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆசுதோஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருவதாக பஹ்ராய்ச் மாவட்ட காவல்துறை கூடுதல் எஸ்.பி. கமலேஷ் தீட்சித் தெரிவித்தார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2007-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆசுதோஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக ஹைதர்கர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.