திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழகத் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதி-ஸ்ரீகாளஹஸ்தி சாலையில் காஜூலமண்யம் பகுதி அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரின் வாகனத்தைக் கடந்து வேகமாக கார் ஒன்று சென்றது. உடனே அந்த காரை போலீஸார் 7 கி.மீ. பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது காரை நிறுத்தி விட்டு, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 3 பேர் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, காரில் இருந்த இரு செம்மரத் தொழிலாளர்களை கைது செய்த போலீஸார், அதிலிருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையைச் சேர்ந்த பொன்னுசாமி (45), வேலூரைச் சேர்ந்த மணி (32) என்பது தெரியவந்தது.
தப்பியோடிய வேலூர் கஸ்பாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கதிரேசன் மற்றும் 2 பேரை போலீஸார் தேடி வருவதாக அவர்கள் கூறினர்.