அரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் பிரதியுமன் (7 வயது) சமீபத்தில் பள்ளி வளாகத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
இதையடுத்து அம்மாநில காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவன் பிரதியுமன் வீட்டுக்கு அரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் வெள்ளிக்கிழமை நேரில் சென்றார். அங்கு மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்ததாவது:
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு அப்பள்ளியை மாநில அரசாங்கம் நிர்வகிக்கும். மாணவன் பிரதியுமன் கொலை தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். இவ்வழக்கின் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க பரிசீலிக்கப்படும். சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்த வழக்கு சரியான திசையை நோக்கிச் செல்கிறது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வருக்கு எனது நன்றி என கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்தார்.