மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வியாபம் (மத்தியப் பிரதேச தொழில் கல்வி தேர்வாணையம்) முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து அந்த மாநில உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த 7 நீதிமன்றங்களும் போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படவுள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு மற்றும் அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் அமைப்பான வியாபத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்துள்ளன. இதில் அந்த அமைப்பின்அதிகாரிகள் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இடைத்தரகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முறைகேடாக தேர்வு பெறுவதற்கும், அரசுப் பணி பெறுவதற்கும் பல கட்டங்களில் பணம் கைமாறியுள்ளது. மொத்தம் ரூ.2,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு நிலைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மொத்தம் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் மாநில சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2015-ஆம் ஆண்டு முதல் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்துவிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 310 பேர் தலைமறைவாயினர். இதில் 17 பேர் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.