"தூய்மையே சேவை' பிரசார இயக்கத்தில் பங்கேற்க முன்வருமாறு பிரபல நடிகர் மோகன் லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கு கேரள மாநில பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி எழுதியிருப்பதாவது:
சினிமா என்பது மிக சக்திவாய்ந்த ஊடகம். அதன்மூலம், மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஏழைகளுக்காகவும், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் தூய்மைப் பணியை நாம் முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களால் மிகவும் விரும்பப்படும் உங்களைப் போன்ற ஒருவர், "தூய்மையே சேவை' இயக்கத்தில் இணைந்து பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். உங்களால் பொதுமக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை உங்களுக்கு விடுக்கிறேன். இந்த இயக்கத்தில் நீங்கள் இணைவதன் மூலம் பல லட்சம் பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
"தூய்மையான பாரதம்' என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.