அக்டோபர் 1-ஆம் தேதி ஏகாதசியும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையையும் ஒரே நாளில் வருவதால் அன்றைய தினம் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.
அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை துர்கா சிலைகளைக் கரைக்கலாம்.அந்நாளில் விஜயதசமியும் வழக்கம்போல் கொண்டாடப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஆனால், துர்கா பூஜை அன்று சிலைகளைக் கரைக்கவும், மொஹரம் பண்டிகையைக் கொண்டாடவும் பொதுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மேற்குவங்க காவல்துறைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற குழப்பமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மம்தா பானர்ஜியை எச்சரித்தது.
தனி மாநிலம் என்பதற்காக தன்னிச்சையாக செயல்படக் கூடாது. ஊகத்தின் அடிப்படையில் அரசாங்கம் நடப்பது மிகவும் ஆபத்தானது என கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகேஷ் திவாரி தெரிவித்தார்.
கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. மேலும் மம்தா பானர்ஜி அராஜக ஆட்சியில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டின.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:
மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரையில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்துவேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையாத படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
இந்த விவகாரத்தில் யாரும் என்னை எதுவும் கூறத் தகுதியில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்தவர் எனக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்றார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அதன் தலைமை நீதிபதியின் அறிவுரைக்குப் பிறகு மம்தாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.