ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் 2007-ம் ஆண்டு அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சென்னை, புதுதில்லி, குர்காம், மும்பை, சண்டீகர் உள்ளிட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 13 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா உரிமையாளர்கள் இந்திரானி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதுதொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கத்தோடு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் மீது உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், ஐ.என்.எஸ் மீடியாவுக்கு நிதியமைச்சகம் அனுமதி வழங்கியபோது கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்ததால், இதற்கும் அவருக்கும் தொடர்பில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.