முகப்பு
இந்தியா

சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பை ரூ.3,000-ஆக குறைத்தது எஸ்பிஐ

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பை ரூ.5,000-லிருந்து ரூ.3,000-ஆக அந்த வங்கி குறைத்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பை ரூ.5,000-லிருந்து ரூ.3,000-ஆக அந்த வங்கி குறைத்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்கத் தவறியமைக்கான கட்டணங்களையும் அந்த வங்கி குறைத்துள்ளது. இந்த வரம்பிலிருந்து முதியோர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பெருநகர வங்கிக் கணக்குகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பராமரிக்க வேண்டிய மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகை ரூ.5,000-லிருந்து, நகர வாடிக்கையாளர்களுக்கானதைப் போலவே ரூ.3,000-ஆகக் குறைக்கப்படுகிறது.
அதைப் போலவே, குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களும் 25 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஓய்வூதியதாரர்கள், அரசின் சலுகைகளைப் பெறுவோர், சிறுவர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதன்மூலம், இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 5 கோடி வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுல்ளது.
ஏற்கெனவே, எஸ்பிஐ வங்கியின் 42 கோடி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களில், ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கும் 13 கோடி பேருக்கு குறைந்தபட்ச இருப்பு வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.