நீரில் மூழ்கி இறந்த நண்பனைக் கவனிக்காமல் 'செல்ஃபி' எடுத்த மாணவர்கள்: கலங்க வைக்கும் கண்ணீர் சம்பவம்!
குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல், சக நண்பர்கள் 'செல்ஃபி' எடுத்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு:
குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல், சக நண்பர்கள் 'செல்ஃபி' எடுத்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஜெயநகர் பகுதியில் நேஷனல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சுமார் 25 என்.சி.சி மாணவர்கள் கொண்ட குழு ஒன்று, கடந்த சனிக்கிழமை அன்று கனகபுரா அருகில் உள்ள சோமகுண்டலு குண்டாஞ்சனேயா கோவிலுக்கு முகாம் ஒன்றுக்கு சென்றனர். அவர்களுடன் கல்லூரி பேராசிரியரும், என்.சி.சி அலுவலருமான் ராஜேஷும் உடன் சென்றுள்ளார்.
Advertisement
அவர்களது திட்டபடி ஒரு இரவு அங்கு தங்கி வேலைகள் செய்துள்ள அவர்கள் ஞாயிறு மாலை ஊருக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் மதியம் 2 மணி அளவில் குண்டாஞ்சனேயா கோவிலையொட்டி அமைந்துள்ள குட்டைக்கு அவர்களனைவரும் குழுவாகச் சென்றுள்ளார்கள்.
அங்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து நீரில் விளையாடியும் 'செல்ஃபி' எடுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்கு பிறகு அவர்கள் திரும்ப வேண்டிய நேரம் வந்த பொழுது, என்.சி.சி முறைப்படி 'ரோல் கால்' செய்த பொழுதுதான் விஸ்வாஸ் என்ற மாணவரைக் காணவில்லை என்பது தெரிய வந்தது.
இது பற்றி இந்த வழக்கை விசாரித்து வரும் காகாலிபுரா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நீரில் விளையாடிய மாணவர்கள் குழுவில் விஸ்வாசும் இருந்துள்ளார். ஆனால் கடைசியில் அவரைக் காணவில்லை என்றவுடன் சக மாணவர்கள் நீரில் இறங்கி தேடியுள்ளனர். அப்பொழுதுதான் சுமார் 10 அடி ஆழத்தில் விஸ்வாஷின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவர் விஸ்வாஷின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு காவல்துறைனர் தெரிவித்தனர்.
பின்னர் ஞாயிறு மாலையில் சக மாணவர்கள் மூலம் விஷ்வாஷின் பெற்றோருக்கு தகவல தெரிவிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை கோவிந்தையா, கல்லூரி நிர்வாகம் உரிய நேரத்தில் தங்களுக்கு தகவலைத் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து விஷ்வாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை கல்லூரியை முற்றுகையிட்டு, உரிய நியாயம் வேண்டி போராட்டம் நடத்தினர். சம்பவம் நடந்த பொழுது என்.சி.சி அலுவலரான ராஜேஷ் அங்கு இல்லை எனவும்,மாணவர்களை தாங்களாகவே ஊருக்கு கிளம்பி போகச் சொல்லி விட்டு அவர் தனியாக கிளம்பி விட்டதாகவும் குற்றம் சாட்டப்படுவதால், ராஜேஷை நேரில் வர வைக்க வேண்டுமென்று கூறினார்.ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் போன் அழைப்புகளை ராஜேஷ் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தங்களது நியாயமான கேள்விகளுக்கு கல்லூரி நிர்வாகம் முறையான பதிலளிக்கவில்லை என்று விஷ்வாஷின் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது