அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் துறவியுமான மஹந்த் மோகன்தாஸ் காணாமல் போய் 12 தினங்களாகி விட்ட நிலையில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கவலை தெரிவித்துள்ள துறவிகள், அவரைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
துறவி மோகன்தாஸ் , மும்பையில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு ஹரித்துவார் நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹரித்துவாரைச் சென்றடையவில்லை. அதன் பின் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்நந்து, அகாரா பரிஷத் அமைப்பு, மோகன்தாஸ் காணாமல் போய் விட்டதாக ஹரித்துவார் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக பிந்துஜி மஹராஜ் என்ற துறவி தெரிவித்தார்.
இதனிடையே, மகாராஷ்டிரத்தின் நாசிக் நகருக்கு 30 கி.மீ. தூரத்தில் உள்ள திரியம்பகேஸ்வர் பகுதியில் அகாரா பரிஷத் அமைப்பின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், மோகன்தாஸ் காணாமல் போனது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கும் இந்த அமைப்பினர், அவரைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 12 தினங்கள் கடந்து விட்ட நிலையிலும் மோகன்தாஸ் எங்கிருக்கிறார் என்பது தெரிய வரவில்லை என்று அகாரா பரிஷத்தின் பொதுச் செயலாளர் மஹந்த் ஹரிகிரி மஹராஜ் , பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.