நாடு முழுவதும் தசரா பெருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் கடைசி 10-ஆவது நாள் இந்த விழா நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் தில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்திருக்கும் ராம்லீலா மைதானத்தில் தரசா பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். அவ்வகையில் நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று தசரா பெருவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் போது, ராவணனை ராமர் வதம் செய்வதை நினைவூட்டும் விதமாக அனைத்தும் நடைபெறும். குறிப்பாக ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து ஏரிப்பது வழக்கம். இதனால் நாட்டில் உள்ள தீய சக்திகள் வதம் செய்யப்பட்டு நன்மை விளையும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில், ராம்லீலா மைதானத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
விழா மைதானத்தில் ராமர், லட்சுமணர் மற்றும் அனுமன் உருவமிட்டவர்கள் இருந்தனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த 90 அடி ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தீயில் அந்த உருவ பொம்மை முற்றிலும் சாம்பலானது. இதனையடுத்து ராமர் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.