பிஎஸ்எஃப் வீரர்களுக்கு தரமற்ற உணவு: உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து,
இந்தியாபிஎஸ்எஃப் வீரர்களுக்கு தரமற்ற உணவு: உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து,
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பாக பொது நல மனுவொன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோ காட்சியை வெளியிட்டார். எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற வகையில் இருப்பதாக அந்த விடியோவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பூரண் சந்த் ஆர்யா என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? அவை எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன? அவற்றுக்கு எத்தகைய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பன குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவிப்பது தற்போது அவசியமாகிறது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், துணை ராணுவப் படை நிர்வாகத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்படடுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய அமைச்சர் விளக்கம்: இதனிடையே, பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தனிப்பட்ட முறையில் தாம் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்று வரும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்கு நடுவே இந்தத் தகவலை தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, ராணுவ வீரர்களுக்கு இணையாக துணை ராணுவப் படையினருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரரான ஜீத் சிங் என்பவர் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் தில்லியில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
துணை ராணுவப் படையினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அவர்.