போபாலில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பாஜக-வுக்குமே தொடர்பு: அகமது படேல் புது குண்டு
போபாலில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பாஜக-வுக்குமே தொடர்புள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது படேல் புதன்கிழமை குற்றஞ்சாட்டினார்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அக்டோபர் 25-ந் தேதி இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த காஸிம் டிம்பெர்வாலா மற்றும் ஆபேத் மிர்ஸா ஆகியோர் போபாலில் பிடிபட்டனர். இதில், காஸிம் என்பவன் குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது படேலுக்குச் சொந்தமான மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளான்.
கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி, குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது படேலுக்குச் சொந்தமான மருத்துவமனையில் பணிபுரிந்த காரணத்தால் இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறினார்.
Advertisement
இதை முற்றிலும் மறுத்ததுடன், பயங்கரவாதிகள் கைது தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அகமது படேல் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் பாஜக-வுக்குமே தொடர்பு உள்ளது என்று அகமது படேல் தெரிவித்துள்ளார்.