ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் அறிமுக சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறித்து...
ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது, இந்த தொடர் இத்தனை சீசன்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஐபிஎல் தொடரானது 18 சீசன்களைக் கடந்து 19-வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் தலா 5 கோப்பைகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. ஆனால், அறிமுக சீசனில் கோப்பையை வென்று தொடங்கி வைத்தது ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Advertisement
ஐபிஎல் அறிமுக சீசனின் இறுதிப்போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அறிமுக சீசனில் கோப்பையை வசப்படுத்தியது.
சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பார்த்திவ் படேல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், எஸ்.வித்யுத் 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மோர்கெல் 13 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக கடைசி ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் அதிகம் ரன்கள் குவிக்க முடியவில்லை. கேப்டன் மகேந்திர சிங் தோனி 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்ததால் அணிக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் யூசுப் பதான் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷேன் வாட்சன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. நீரஜ் படேல் 2 ரன்களுக்கும், கம்ரான் அக்மல் 6 ரன்களுக்கும் வெளியேறினர்.
அஸ்நோத்கரும், வாட்சனும் தலா 28 ரன்களுடன் பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் அணியின் நிலை திண்டாட்டமானது.
அதன் பின்னர் யூசுப் பதான் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான நேரடி த்ரோவில் சிக்கி பதான் ரன் அவுட் ஆனதும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் ராஜஸ்தானுக்கு வெற்றி என்ற நிலையில் எல்.பாலாஜி பந்துவீச வந்தார். பாலாஜி ஒரு பந்தை 'வைடு' பந்தாக வீச டென்ஷனாக இருந்த விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அதை சரியாகப் பிடிக்காததால் ராஜஸ்தானுக்கு 2 ரன்கள் கிடைத்தது.
கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில் 2 ரன்கள் எடுக்க ஸ்கோர் சமநிலையை அடைந்தது. கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சோஹைல் தன்வீர் ஒரு ரன் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் அரைசதமும் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய யூசுப் பதான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு ரூ.4.8 கோடியும், சென்னை அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசாக கிடைத்தது.