சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) பயணித்த பேருந்தை குறிவைத்து நக்ஸஸ்
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) பயணித்த பேருந்தை குறிவைத்து நக்ஸஸ் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் இருவர் பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
பிஜப்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வருகை தரவிருப்பதை முன்னிட்டு, அங்கு சிஆர்பிஎஃப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்மா கிராமம் அருகே திங்கள்கிழமை ரோந்துப் பணிக்காக 30 சிஆர்பிஎஃப் வீரர்களுடன் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை குறிவைத்து, நக்ஸல் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பிஜப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல், பிஜப்பூர் மாவட்டத்தின் பிஜப்பூர் - போபால்பட்னம் இடையிலான சாலையில் சிஆர்பிஎஃப் படையின் மற்றொரு குழுவினரை குறிவைத்து, நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். இரு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதுடன், வீரர்களை நோக்கி நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் நக்ஸல்களுக்கு பதிலடி கொடுத்தனர். பின்னர் நக்ஸல்கள் தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.