முகப்பு
இந்தியா

ரயில்வே, வங்கிகள் மீது அதிக ஊழல் புகார்: ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல்

கடந்த 2017-ஆம் ஆண்டில் ரயில்வே மற்றும் பொதுத் துறை வங்கிகள் மீதுதான் அதிகளவில் ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:08 AM
பகிர்:

கடந்த 2017-ஆம் ஆண்டில் ரயில்வே மற்றும் பொதுத் துறை வங்கிகள் மீதுதான் அதிகளவில் ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
எனினும், 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஊழல் புகார்கள் 52 சதவீதம் அளவுக்கு குறைவாகவே வந்துள்ளன.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் 2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மொத்தம் 23,609 புகார்கள் வந்துள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு குறைவான புகார்கள் வந்துள்ளன. ரயில்வே, பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றுபவர்கள்தான் அதிக அளவில் புகார்களுக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்வே அதிகாரிகள் மீது 12,089 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 2,514 புகார்கள் நிலுவையில் உள்ளன. பொதுத் துறை வங்கி அதிகாரிகள் மீது 8,243 புகார்கள் வந்துள்ளன.
தில்லி அரசு அதிகாரிகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக புகார்கள் வந்துள்ளன. 2016-ல் தில்லி அரசு அதிகாரிகள் மீது 969 புகார்கள் மட்டுமே இருந்தன. இது 2017-இல் 6,819 ஆக அதிகரித்துவிட்டது. 
மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக 2,713 புகார்களும், பெட்ரோலியத் துறை அதிகாரிகள் மீது 1,194 புகார்கள் வந்துள்ளன. இது தவிர சுங்க வரித் துறை அதிகாரிகள், உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் மீது கணிசமான அளவில் லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.