ரூ.2,600 கோடி வங்கிக் கடன் முறைகேடு: குஜராத் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
பல்வேறு வங்கிகளில் ரூ.2,654 கோடி கடன் முறைகேடு செய்ததாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மின் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில்
பல்வேறு வங்கிகளில் ரூ.2,654 கோடி கடன் முறைகேடு செய்ததாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மின் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் செயல்பட்டு வரும் டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம் (டிபிஐஎல்), மின்சார வயர் உள்ளிட்ட மின் சாதனங்களை தயாரித்து வருகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத் துறை மற்றம் தனியார் வங்கிகள் என மொத்தம் 11 வங்கிகளிடம் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது. இது தவிர, வங்கிகளிடம் கடன் பொறுப்பேற்பு கடிதங்களையும் டிபிஐஎல் நிறுவனம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,654.40 கோடியாக அதிகரித்தது. கடன் திரும்பி வராததால் வங்கிகள் அவற்றை வாராக்கடனாக அறிவித்தன.
அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் சார்பில் சிபிஐ-யில் புகார் தெரிவிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அந்த நிறுவனம் தனது லாபத்தை பொய்யாக அதிகரித்து காட்டி, பல்வேறு போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, டிபிஐஎல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். பட்னாகர், அவரது மகன்களும், நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்களுமான அமித் பட்னாகர், சுமித் பட்னாகர் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். வதோதராவில் உள்ள அவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சில நாள்களுக்கு முன்பு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், அந்த நிறுவனம் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களும் வதோதராவில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
டிபிஐஎல் நிறுவனத்துக்கு பாங்க் ஆஃப் இந்தியா ரூ.348.99 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.279.46 கோடியும், பாங்க் ஆஃப் பரோடா ரூ.348.99 கோடியும் கடன்அளித்துள்ளன. இந்த கடன் முறைகேட்டில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.