இந்தியா

உ.பி.யில் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணின் தந்தை சிறையில் கொலை: பாஜக எம்எல்ஏவின் சகோதரர் கைது

உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலத்கார குற்றம்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை சிறையில் மரணம் அடைந்த சம்பவத்தில், எம்எல்ஏவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

IANS


லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலத்கார குற்றம்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை சிறையில் மரணம் அடைந்த சம்பவத்தில், எம்எல்ஏவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மர்மமான முறையில் நேற்று மரணமடைந்தார். இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அடித்துக் கொலை செய்ததாக எம்எல்ஏவின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச காவல்துறையினரால் அமைக்கப்பட்ட தனிப்படையினர், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் சகோதரர் அதுல் சிங்கை கைது இன்று காலை செய்துள்ளனர். இவர் மீது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண்ணின் தந்தையைக் கொன்றது மற்றும் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பங்கார்மவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கும் அவரது சகோதரர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது பெண் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் புகாரை வாங்க மறுத்ததை அடுத்து, லக்னெளவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பு அப்பெண் ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றார்.

முன்னதாக, எம்எல்ஏவின் சகோதரரை தாக்கியதாக அப்பெண்ணின் தந்தையை சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். 

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நலக் குறைவு என்ற காரணத்தின் பேரில் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எனது தந்தையைக் கொன்றுவிடுவதாக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே மிரட்டல் விடுத்தனர். இப்போது அதேபோல சிறையில் வைத்து அவரைக் கொலை செய்துவிட்டனர்' என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சியான சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் தந்தை உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள எம்எல்ஏ குல்தீப், 'என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சதி என்றும், எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குல்தீப்பின் சகோதரரின் ஆதரவாளர்கள்தான், சிறையில் இருந்த அப்பெண்ணின் தந்தையை அடித்துக் கொன்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT