புதுதில்லி: நீதிபதிகளை மிரட்டும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கும்படி கோரி குடியரசுத் துணைத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளைக் சேர்ந்த 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புது தில்லியில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'நீதித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியதை உறுதி செய்யவும், அதில் எந்த தலையீடும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும்' இந்த மனு அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் நீதிபதிகளை மிரட்டும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியும் அதன் நண்பர்களும் கண்டனத் தீர்மானத்தினை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தத் துவங்கி விட்டனர். கண்டனத் தீர்மானத்தின் சக்தியினை இத்தகைய அற்பமான விஷயங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்தான சம்பவமாகும்.
இந்த சம்பவமானது நீதிபதிகளை மிரட்டும் ஒரு முயற்சி ஆகும். அத்துடன் இதர நீதிபதிகளுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். அதன் மூலம் 'நீங்கள் எங்களோடு ஒத்துழைக்கவில்லை என்றால், ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்தால் உங்களைப் பழி வாங்கி விடலாம்' என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அருண் ஜேட்லி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.