கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திராவதி நதியில் இருந்து மேலும் 11 நக்ஸலைட்டுகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
நதியில் மிதந்து கொண்டிருந்த இந்த உடல்கள் அழுகும் நிலையில் இருப்பதாகவும், மகாராஷ்டிரா - சட்டீஸ்கர் எல்லைப் பகுதியில் இந்திராவதி நதியில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸலைட் தீவிரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தப்பியோடினர்.
அவர்களில் பலருக்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்சிரோலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக என்கவுண்டர் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கட்சிரோலி மாவட்டம், பாம்ராகாத் தாலுகாவிலுள்ள தாட்கான் வனப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு அதிரடிப்படை போலீஸார் கடந்த சனிக்கிழமை தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இந்நிலையில், போலீஸாருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், 16 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 2 பேர் அந்த இயக்கத்தில் மாவட்ட அளவிலான தளபதிகளாக செயல்பட்டு வந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த 38 ஆண்டுகளாக நக்ஸலைட்டுகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில், இந்த சம்பவம் போலீஸாருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.