உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி உட்பட 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 3 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புது தில்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 3 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொலிஜியத்தின் நீதிபதிகள் நியமனப் பரிந்துரையை மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதில் குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு கையெழுத்திட்டார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தாலும், இன்னமும் 6 காலிப் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், கடந்த சில மாதங்களாக நீதித் துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளன.
தற்போதைய நடைமுறைப்படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரைக்கும். அவை, மத்திய அரசு மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருகிறது.